Saturday, February 14, 2015

சீராஹ் வகுப்பு - 3

நபிகள் நாயகம் பிறப்பு,

பூமியில் இருளை அகற்றி , அல்லாஹ்வின் வெளிச்சத்தை கொண்டு வர அல்லாஹ் படைத்த சிறந்த பிறப்பு , இது போல ஒரு படைப்பு இவ்வுலகில் இல்லை , ஷிர்க்கை அழிக்க நாடி – அல்லாஹ் நபியை பிறக்க வைக்கிறான் .

உலகம் அருள் பெற்ற நாள் – நபிகள் பிறந்த நாள்

உலகம் இருள் சூழ்ந்த நாள் – நபிகள் இறந்த நாள்

நபிகள் நாயகம் – திங்கள்கிழமை – ரபியுல் அவ்வல் – யானை படை ஆண்டில் ( யானை படை இற்கு 50 நாட்களுக்கு பின் பிறக்கிறார்கள் ) பிறந்தார்கள் .

திங்கள்கிழமை நபிகள் நோன்பு வைப்பார்கள் - காரணம் ,  இந்த நாளில் தான் பிறந்தேன் என்பார்கள் .

எப்போது பிறந்தார்கள் என்ற தேதி தெரியாது ,  பிறக்கும் போது இவர்கள் தான் நபியாக போகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது அதனால் தேதியை யாரும் நினைவு வைத்து குறித்து வைக்கவில்லை . தாபியீன்கள் , தபஉத்தாபியீன்கள் யாரும் நபிகள் பிறந்த நாளை கொண்டாட வில்லை .

ஹிஜ்ரி 570 க்கு பின்  இருந்து தான் 12 ஆம் நாள் மீலாதுன் நபி யாக கொண்டாடப்படுகிறது .

வானை நோக்கி கையை உயர்த்தியோ , சுஜூதில் படுத்த மாதிரியோ , அல்லது கத்னா செய்தோ நபிகள் பிறக்கவில்லை , இது அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை.

நபி ஸல் அவர்கள் பிறந்தபோது அவர்களது நுபுவ்வத்துக்கு முன்னோடியாக ஆமினா ரலி அவர்களின் உடலிலிருந்து ஒரு பேரொளி வெளிப்பட்டது அதன் பிரகாசத்தில் ஷாமின் கோட்டைகள் ஒளிர்ந்தன .

ஷாம் தேசம் பரகத் நிறைந்த தேசம் , நிறைய நபிமார்கள் வாழ்ந்த இடம் .

 

ஒரு ஆசிரியர் அழகான ஒரு வார்த்தையை எழுதினார் ஒரு புத்தகத்தில் ....

 “ தந்தை இல்லாமல் ஒரு யதீம் பிறந்தார் , இந்த உலகத்தில் உள்ள யதீம்கள் அனைவரையும் கண்ணியப்படுத்த “ .

( யதீம் – தந்தை இல்லாமல் பிறக்கும் குழந்தை , அனாதை )

பிறப்புக்கு முன் தந்தை – பின் தாய் பின் பாட்டனார் .

யாகூப் நபியின் மகன் யூசுப் நபியையும் அல்லாஹ் அவர் தந்தையிடம் இருந்து பிரிந்து பின் - அல்லாஹ் யூசுப் நபியை வளர்க்கிறான், அதுபோலவே நபிகளின் வாழ்க்கையை அல்லாஹ் தானே வடிவமைத்து வளர்க்கிறான்.

நபி பிறக்க இரண்டு காரணம் –

ஒன்று - இப்ராஹிம் நபியின் பிரார்த்தனை – ( 2 – 129 )படிக்கவும் .

இரண்டு – ஈஸா நபி – சமூகத்துக்கு – நற்செய்தி  ( 61 – 6 ) படிக்கவும் .

இந்த இரு நபிகளின் பிரார்தனையிலேயே தான் நபிகள் பிறந்தார்கள் .

நபிக்கு முஹம்மத் என்ற பெயர் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் வைக்கிறார்கள் .மக்காவில் யாருக்கும் அதுவரை அப்பெயர் வைக்கப்படவில்லை .

நபிக்கு முதலில் பால் கொடுத்தவர்கள் அவர்களின் தாயார் ஆமீனா ரலி , அதன் பின் அபு லஹபின் அடிமை பெண் ஸுவைபிய்யா ஆவார் .அதன் பின் தான் ஹலீமா பின்த் அபு துவைப் அவர்கள் பால் கொடுக்கிறார்கள் .

- அக்காலத்தில் நகர்ப்புற அரபியர்கள் தங்களது குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்காகக் கிராமப்புற செவிலியர்களைத் தேர்ந்தெடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். குழந்தைகளுக்கு நகரத்திலுள்ள நோய் தொற்றிவிடாமலிருக்கவும், உடல் உறுதி பெற்று நரம்புகள் வலிமை அடையவும், தூய அரபி மொழியை திறம்படக் கற்றுக் கொள்ளவும் இந்த நடைமுறையைக் கையாண்டு வந்தனர். தனது பேரருக்குரிய செவிலித் தாயை அப்துல் முத்தலிப் தேடினார் . இறுதியாக ஸஅத் இப்னு பக்ர் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த ஷஹலீமா பின்த் அபூ துவைப் அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ்  என்ற பெண்ணிடம் ஒப்படைத்தார்.

பால் குடிக்காலங்களில் ஹலீமா நபி (ஸல்) அவர்களிடம் பல அதிசய நிகழ்வுகளைக் கண்டார். அதை அவரே சொல்லக் கேட்போம். 'நான் எனது கணவர் மற்றும் கைக் குழந்தையுடன் ஸஅத் கிளையைச் சேர்ந்த சில பெண்களோடு பால் குடிக்கும் குழந்தைகளைத் தேடி வெளியில் புறப்பட்டோம். அது கடுமையான பஞ்ச காலம். நான் எனது வெள்ளைக் கழுதையில் அமர்ந்து பயணித்தேன். எங்களுடன் ஒரு கிழப்பெண் ஒட்டகம் இருந்தது. அதில் ஒரு சொட்டு பால் கூட கறக்க முடியாது. எங்களது குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததால் இரவு முழுவதும் எங்களால் உறங்க முடியவில்லை. எனது மார்பில் அக்குழந்தையின் பசி தீர்க்கும் அளவு பாலும் இல்லை. எங்களது ஒட்டகையிலும் பாலில்லை. எனினும், அல்லாஹ்வின் புறத்திலிருந்து என் சிரமத்திற்கான விடிவையும் அவனது அருளையும் பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். நான் வாகனித்த பெண்

  கழுதை மிகுந்த பலவீனத்துடன் மெதுவாகவே சென்றது. இது என்னுடன் வந்த குழுவினருக்கு பெரும் சிரமத்தை அளித்தது. ஒரு வழியாக மக்காவை அடைந்து பால்குடிக் குழந்தைகளைத் தேடி அலைந்தோம். எங்களுடன் சென்ற அனைத்துப் பெண்களிடமும் அல்லாஹ்வின் தூதரை காட்டப்பட்டது. எனினும், அக்குழந்தை அனாதை என்று கூறப்பட்டதால் அனைவரும் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். ஏனெனில், குழந்தையின் தந்தையிடமிருந்தே நாங்கள் ஊதியம் பெறமுடியும். இவர்கள் அநாதை என்பதால் தாய் அல்லது பாட்டனார் எங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? என எங்களுக்குள் பேசிக் கொண்டோம். எனவே, அல்லாஹ்வின் தூதரை எடுத்துச் செல்ல எங்களில் எவரும் விரும்பவில்லை. என்னைத் தவிர என்னுடன் வந்த அனைத்துப் பெண்களுக்கும் குழந்தைகள் கிடைத்தனர். அனைவரும் திரும்பிச் செல்லத் தொடங்கியபோது நான் எனது கணவரிடம் 'அனைவரும் குழந்தையுடன் திரும்புகையில் நான் வெறுங்கையுடன் செல்வதில் எனக்குச் சிறிதும் சம்மதமில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அந்த அனாதைக் குழந்தையை பெற்று வருகிறேன்' என்று கூறியதற்கு அவர் 'தாராளமாகச் செய்யலாமே! அக்குழந்தையின் மூலம் அல்லாஹ் நமக்கு (பரக்கத் செய்யலாம்) வளம் தரலாம்' என்றார். நான் அங்கு சென்று குழந்தையை வாங்கி வந்தேன். எனக்கு வேறு எந்தக் குழந்தையும் கிட்டவில்லை என்ற காரணத்தால் மட்டுமே நான் அக்குழந்தையை வாங்கிக் கொண்டேன். நான் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பினேன். அக்குழந்தையை எனது மடியில் வைத்தவுடன் எனது மார்புகளில் பால் சுரந்தது. அக்குழந்தை வயிறு நிரம்ப பால் அருந்தியது. அதன் சகோதரராகிய (எனது குழந்தையும்) பாலருந்தியது. பிறகு இருவரும் உறங்கிவிட்டனர். அதற்கு முன் நாங்கள் எங்களது குழந்தையுடன் உறங்க முடிந்ததே இல்லை. எனது கணவர் எங்களது கிழ ஒட்டகையை நோக்கிச் சென்றார். அதன் மடி பாலால் நிரம்பியிருந்தது. அதை கறந்து நானும் எனது கணவரும் பசிதீரக் குடித்தோம். அன்றிரவை நிம்மதியாகக் கழித்தோம். காலையில் எனது கணவர்: ஷஹலீமாவே அல்லாஹ்வின் மீதாணையாக! நீ மிகவும் பரக்கத் (வளம்) பொருந்திய ஒரு குழந்தையை அடைந்திருக்கிறாய்| என்றார். அதற்கு நான் அப்படித்தான் நானும் நம்புகிறேன்| என்றேன். பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். எனது பெண் கழுதையில் அக்குழந்தையையும் அமர்த்திக் கொண்டேன். எனது பெண் கழுதை என்னுடன் வந்த குழுவினர் அனைவரின் கழுதைகளையும் முந்திக் கொண்டு சென்றது. அப்பெண்கள் என்னை நோக்கி 'அபூ துவைபின் மகளே! உனக்கு என்ன நேர்ந்தது. எங்களுடன் மெதுவாகச் செல்! நீ வரும்போது வாகனித்து வந்த கழுதைதானா இது?' என்றனர். 'நான் அல்லாஹ்வின் மீதாணையாக! அதுதான் இது' என்றேன். அவர்கள் 'நிச்சயமாக என்னவோ நேர்ந்துவிட்டது' என்றனர். எங்களது ஊருக்குத் திரும்பினோம். அல்லாஹ்வின் பூமியில் எங்களது பகுதியைப் போன்றதொரு வறண்ட பூமியை நான் கண்டதில்லை. ஆனால், மேய்ச்சலுக்கு செல்லும் எனது ஆடுகள் மாலையில் வீடு திரும்பும்போது கொழுத்து மடி சுரந்து திரும்பும். அதை கறந்து அருந்துவோம். எங்களைத் தவிர வேறு எவரும் தங்களது ஆடுகளில் ஒரு துளிப் பால் கூட கறக்க முடியாது. அவர்களது ஆடுகளின் மடிகள் வரண்டிருந்தன. எங்கள் சமூகத்தில் அனைவரும் தங்களது இடையர்களிடம் உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஹலீமாவின் இடையர் மேய்க்கும் பகுதிகளுக்குச் சென்று மேய்த்து வாருங்கள்! என்று சொல்வார்கள். இருப்பினும் எனது ஆடு வயிறு நிரம்பி மடி சுரந்து வரும்போது அவர்களுடைய ஆடுகள் வயிறுகள் ஒட்டிப் போய் காய்ந்த மடியுடன் திரும்பி வந்தன. இவ்வாறு அக்குழந்தைக்கு பால்குடி மறக்கடிக்கும் வரையிலான இரண்டு வருடங்கள் வரை அல்லாஹ்விடமிருந்து பல நன்மைகளையும் வளங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தோம். இரண்டு வயதில் ஏனைய குழந்தைகளைவிட மிக உறுதியாகவும் ,வலிமையாகவும் அக்குழந்தை வளர்ந்திருந்தது. அவரிடமிருந்து ஏராளமாக நன்மைகளை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருந்ததால் அவரை எங்களுடன் தங்க வைத்துக் கொள்ள மிகுந்த ஆவல் கொண்டோம். எனினும், தவணை முடிந்து விட்டமையால் அவரது தாயாரிடம் அழைத்துச் சென்றோம். அவரது தாயாரிடம் இந்த அருமைக் குழந்தை இன்னும் திடகாத்திரமாக வளரும் வரை என்னிடமே விட்டுவிடுங்கள். மக்காவில் ஏதேனும் நோய் அவரைப் பீடித்து விடுமென நான் அஞ்சுகிறேன் என்று கூறினேன். எனது தொடர்ச்சியான வற்புறுத்தலால் குழந்தையை என்னிடமே ஒப்படைத்து விட்டார்.' (இப்னு ஹிஷாம்) 

நெஞ்சு திறக்கப்படுதல்

இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் மீண்டும் ஸஅத் கிளையாரிடம் அழைத்து வரப்பட்டார்கள். சில மாதங்களுக்குப் பின் அவர்களது நெஞ்சு திறக்கப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றதென இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். (மற்ற வரலாற்றாசியர்கள் நபி (ஸல்) அவர்களின் நான்காவது வயதில் தான் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்பர்.) அந்த நிகழ்ச்சி குறித்து அனஸ் (ரழி) கூறுவதாவது: நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வருகைத் தந்து நபி (ஸல்) அவர்களை மயக்குமுறச் செய்து, நெஞ்சைத் திறந்து இதயத்தை வெளியே எடுத்தார். அதில் ஒட்டியிருந்த ஒரு துண்டை அகற்றிவிட்டு இது உம்மிடமிருந்த ஷைத்தானின் பங்காகும் என்று கூறி, தங்கத் தட்டில் இதயத்தை வைத்து அதில் ஜம்ஜம் தண்ணீரை ஊற்றிக் கழுவினார். பிறகு அந்த இதயப் பகுதிகளை ஒன்றிணைத்து நெஞ்சினுள் திரும்பப் பதித்துவிட்டார். இதைக்கண்ட சிறுவர்கள் ஹலீமாவிடம் ஓடோடி வந்து 'முஹம்மது கொலை செய்யப்பட்டார்' என்றனர். நபி (ஸல்) அவர்களை நோக்கி அனைவரும் விரைந்தனர். அவர் நிறம் மாறிக் காட்சியளித்தார். அனஸ் (ரழி) கூறினார்கள்: 'நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் தைக்கப்பட்டதற்கான அடையாளத்தை நான் கண்டேன்.' (ஸஹீஹ் முஸ்லிம்) பாசமிகு தாயாரிடம் இந்நிகழ்ச்சியால் அதிர்ந்துபோன ஹலீமா நபி (ஸல்) அவர்களை அவரது தாயாரிடம் ஒப்படைத்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆறு வயது வரை தாயாரிடமே வளர்ந்தார்கள். ஆமினா, மதீனாவில் மரணமடைந்த தனது அன்புக் கணவன் கப்ரைக் கண்டுவர விரும்பினார். தனது குழந்தை முஹம்மது, ஊழியப் பெண் உம்மு அய்மன் மற்றும் பொறுப்பாளர் அப்துல் முத்தலிப் ஆகியோருடன் மக்காவிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். மன அமைதிக்காக ஒரு மாதம் அங்கு தங்கிவிட்டு மக்காவுக்கே மீண்டும் பயணமானார். வழியில் ஆமினா நோய் வாய்ப்பட்டார். பிறகு நோய் அதிகமாகி மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையே அப்வா என்ற இடத்தில் மரணமடைந்தார். (இப்னு ஹிஷாம்) பரிவுமிக்க பாட்டனாரிடம் நபி (ஸல்) அவர்களை அப்துல் முத்தலிப் மக்காவுக்கு அழைத்து வந்தார். அவர் அனாதையான தன் பேரர் மீது அன்பையும் பாசத்தையும் ஊட்டி வளர்த்தார். பிறக்கும் முன் தந்தையை இழந்த சோகம் ஒரு புறம் வருத்திக்கொண்டிருக்க, தற்போது தாயையும் இழந்து அந்த சோகம் இரட்டிப்பாகி விட்டது. தனது பிள்ளைகளை விட பேரர் மீது மிகுந்த அன்பு செலுத்தினார். அவரை தனிமையில் விட்டுவிடாமல் எல்லா நிலையிலும் தன்னுடன் வைத்து தனது பிள்ளைகள் அனைவரையும்விட அவருக்கு முன்னுமை அளித்து வந்தார்.

  புனித கஅபாவின் நிழலில் அப்துல் முத்தலிபுக்கென ஓர் விரிப்பு விரிக்கப்பட்டிருக்கும். அவர் வரும்வரை அவரது பிள்ளைகள் அந்த விரிப்பைச் சுற்றி அமர்ந்திருப்பர். அவருக்கு மரியாதை செய்யும் விதமாக எவரும் அதில் அமரமாட்டார்கள். சிறுவரான நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்து விரிப்பில் அமர்வார்கள். அவரை அதிலிருந்து அப்துல் முத்தலிபின் பிள்ளைகள் அகற்றிவிட முயல்வார்கள். இதை அப்துல் முத்தலிப் பார்த்துவிட்டால் 'எனது அருமைப் பேரரை விட்டுவிடுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்கென ஒரு தனித் தன்மை இருக்கிறது' என்று கூறி, தன்னுடன் விரிப்பில் அமர்த்தி அவரது முதுகை தடவிக் கொடுப்பார். அவரது செயல்களையும் அசைவுகளையும் கண்டு களிப்படைவார். (இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) அவர்களுக்கு 8 ஆண்டு இரண்டு மாதங்கள் பத்து நாள்கள் ஆனபோது பாட்டனார் அப்துல் முத்தலிப் மக்காவில் மரணமடைந்தார். தனது மரணத்திற்கு முன்பே சிறுவரை அவரது தந்தை அப்துல்லாஹ்வின் உடன்பிறந்த சகோதரர் அபூதாலிப் பராமரிக்க வேண்டுமென விரும்பினார். (இப்னு ஹிஷாம்) சகோதரன் மகனைப் பராமரிக்கும் பொறுப்பை அபூதாலிப் மிகச் சிறப்பான முறையில் நிறைவேற்றினார். தனது பிள்ளைகளில் ஒருவராக அவரை ஆக்கிக் கொண்டார். அவருக்கு மிகுந்த முக்கியத்துவமும் கண்ணியமும் அளித்து வந்தார். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பாதுகாத்து அரவணைத்தார். நபி (ஸல்) அவர்களுக்காகவே பிறரின் நட்பையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார்.......

இனி இன்ஷா அல்லாஹ் அடுத்த வகுப்பில் .....

இதில் இருந்து என்ன படிக்கலாம் ........

-    நபிகள் பிறந்த மாதம் ,ஆண்டு .

-    பால்குடி தாய்கள் பெயர்கள்

-    பிறந்த அன்று நிகழ்ந்த அதிசயம்

-    யார் துஆஹ் வில் நபிகள் வருகிறார்கள்

-    குறிப்பிட்டு இருக்கும் வசனத்தை அறிதல்

-    ஹலிமா ரலி க்கு நபியை வாங்கிய பின் நடக்கும் அதிசயங்களில் சிலதை நினைவில் வைத்தல் .

-    நபியை வளர்த்தவர்கள் பெயர்கள் , உறவு முறைகளை நினைவில் கொள்ளுதல் .

******** நீல நிறத்தில் இருக்கும் நோட்ஸ் அனைத்தும் நெட்டில் இருந்து COPY,PASTE செய்தது ...., அல்லாஹ் டைப் பண்ணும் வேலையை எளிதாக்கி விட்டான் ************......... அல்ஹம்துலில்லாஹ் .....

வஸ்ஸலாம் .... ஜசாக் அல்லாஹு ஹைரன் .  

No comments:

Post a Comment